தீபாவளி நினைவுகள்
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து
தலை நனைய எண்ணெய் தேய்த்து குளித்து
ஆசை ஆசையாய் புத்தாடை அணிந்து
முகம் சுளித்து லேகியம் சாப்பிட்டு
சரவெடி, லக்ஷ்மி வெடி, குருவி வெடி, பிஜிலி வெடி,
ராக்கெட், தர-சக்கரம், புஸ்வானம் என்று
வாங்கிய பாட்டாசு ஒன்றும் மிஞ்சாமல்
திட்டம் போட்டபடி வெடித்து தீர்த்து
பிறகு என்ன செய்வது என்று தெரியாமல்
பொழுது விளைவது ஏன் என்று புரியாமல்
நண்பர் உறவினர் எல்லோருக்கும்
தீபாவளி வாழ்த்து கூவி சொல்லி
குடும்பத்துடன் அமர்ந்து விருந்துண்டு
'உண்ட களைப்பு' என்று விழுந்து உருண்டு
ஒரு சின்ன தூக்கம் போட்டு எழுந்து
இனிப்பு பலகாரம் கொறித்து
"விடிய விடிய தீபாவளி, அதுக்கு அப்புறம் கோமாளி"
என்று பாட்டி சொல்வதை கேட்டு
அடுத்த தீபாவளி எப்பொழுது வரும் என்று
ஆவலோடு எதிர்பார்த்த அந்த பள்ளி நாட்களின் அருமை
இன்று உலகத்தின் ஒரு எல்லையில்
வீடும் நாடும் எட்டா தூரத்தில்
தனிமையில் ஒரு அறையில்
இருக்கும்போதுதான் புரிகிறது.
சில கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும்
அவைகளை கேட்காமல் இருக்க முடியாது.
அப்படிதான் கேட்கிறேன் இதையும்
அந்த நாளும் வந்திடாதோ ?
Comments